கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடியால் சீரழிந்துள்ள அமெரிக்க பொருளாதாரத்தை மீட்கவும் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவும் 1.9 ட்ரில்லியன் டொலர் நிதியைச் செலவிடும் திட்டத்தை 20-ஆம் திகதி ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் இந்த நிதியில் 1 இலட்சம் கோடி டொலர் நேரடியாக அமெரிக்கக் குடும்பங்களுக்கு உதவி நிதியாக அளிக்கப்படும்.
இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டொலர் நிதிவியைப் பெற்றுக்கொள்வார்கள்.
அத்துடன் 41,500 கோடி டொலர் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்தவும், 44,000 கோடி டொலர் சிறு வணிகங்களுக்கு உதவி செய்யவும் பயன்படுத்தப்படும்.
உலகில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.
இன்றுவரை அமெரிக்காவில் 2 கோடி 38 இலட்சத்து 48 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா மரணங்களும் 4 இலட்சத்தை நெருங்கி வருகின்றன. இன்று காலை வரையான தரவுகளின் பிரகாரம் 3 இலட்சத்து 98 ஆயிரம் பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
தற்போது தினசரி சராசரியாக 2 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோய், கொரோனா மரணங்களுக்கு மேலதிகமாக வேலையில்லாத் திண்டாட்டமும் அமெரிக்காவில் உச்சத்தில் உள்ளது. 1 கோடியே 10 இலட்சம் பேர் அமெரிக்காவில் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவேன் என உறுதியளித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கும் தீா்வு காணப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
டெலாவேர் மாநிலத்தில் உள்ள வில்மிங்டன் என்ற தமது சொந்த நகரில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவு பேசிய பைடன், பல தலைமுறைகளுக்கு ஒரு முறை நேரும் பெரும் சுகாதார நெருக்கடி மற்றும் பல தலைமுறைகளுக்கு ஒரு முறை நேரும் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு நாங்கள் முகம் கொடுத்துள்ளோம் எனக் கூறினார்.
தொற்று நோயால் பெரும் மனிதப் பேரவலம் இடம்பெற்றுவரும் நிலையில் நாம் விரைவாகச் செயற்பட வேண்டும். இனி காலம் கடத்த முடியாது எனவும் அவா் தெரிவித்தார்.